தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்
பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
ஆறுநாழிகைக்கு ஒரு முறை
நிறம் மாறும் பஞ்சவர்ணேஸ்வரர் !!!
மகம் நட்சத்திர கோயில்
திருநல்லூர்(83/274)
இங்கு இறைவன் இன்றும் ஐவகை நிறத்துடன் தினந்தோறும் காட்சி தருவது பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். தேவார திருப்பாடல் பாடப்பெற்ற 83 வது சிவாலயம்.
மூலவர் ; பஞ்சவர்ணேஸ்வரர்
உற்சவர் : கல்யாணசுந்தரேஸ்வரர்
அம்மன்/தாயார் : கல்யாணசுந்தரி, கிரிசுந்தரி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : சப்தசாகரம்
புராண பெயர் : திருநல்லூர்
ஊர் : நல்லூர்
மாவட்டம் : தஞ்சாவூர்
மூலவர் சிறப்பு
இம்மூல லிங்கத்தின் பாணம், இன்ன பொருளால் உருவாக்கப்பட்டது என்று கூற இயலாத நிலையில் தாமிர நிறத்தில் விளங்குகிறது.
ஒரு நாளில் ஆறு நாழிகைக்கு ஒரு முறை நிறம் மாறி தினமும் ஐந்து வண்ணமாகக் காட்சியளிக்கிறார். தமிழ்முறைப்படி ஒரு நாழிகையென்பது சுமார் 24 நிமிடங்களாகும். எனவே ஆறு நாழிகையென்பது 2 மணி 24 நிமிடங்கள் ஆகிறது. இம்முறையில் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர்
காலை 6 முதல் 8.25 வரை தாமிர நிறத்திலும்,
காலை 8.26 முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு நிறத்திலும்,
காலை 10.49 முதல் 1.12 வரை உருக்கிய தங்கம் போன்ற நிறத்திலும்,
மதியம் 1.13 முதல் 3.36 வரை நவரத்தின பச்சை நிறத்திலும்,
மாலை 3.37 முதல் 6 மணி வரை இன்ன நிறம் என அறிய முடியாத வண்ணத்திலும் காட்சி அளிப்பது காணக் கிடைக்காத அருங்காட்சியாகும்.
கோவிலமைப்பு
இந்த மூல லிங்க அமைப்பில் இன்னொரு சிறப்பும் உள்ளது. இதன் ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் உள்ளன. இப்படி இரண்டு பாணங்கள் உள்ள அமைப்பு வேறு எங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டாவதாக உள்ள சிறிய பாணத்தை பிரதிஷ்டை செய்தவர் அகத்திய ரிஷி என்பார்கள்.
இங்கு அருள்பாலிக்கும் அம்பிகையின் பெயர், கிரி சுந்தரி. மிகப் பெரிய வடிவில், பேரழகுடன், சுவாமிக்கு வடகிழக்கில் தனிக் கோயிலில் தென்முகமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அம்பாள்.
இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் இவ்விறைவனை வழிபட, தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
சிவன் கோயிலில சடாரி வைக்கும் அதிசயம்
நாம் பெருமாள் கோயில்களுக்குச் செல்லும்போது, நமக்கு தீர்த்தப் பிரசாதம் கொடுப்பதுடன், நமக்கு பகவானின் திருவடி ஸ்பரிசம் கிடைக்கவேண்டும் என்பதற்காக, பகவானின் திருவடிகள் பதிக்கப்பட்ட சடாரியை நம் தலையில் வைத்து எடுப்பார்கள். அப்படி பெருமாள் கோயில்களில் சடாரி வைப்பதுபோலவே, ஒரு சிவன் கோயிலிலும் சடாரிவைத்து எடுக்கிறார்கள். பக்தர்களின் தலையில் சடாரி வைக்கும் நடைமுறை, தொன்மைச் சிறப்பு வாய்ந்த, நல்லூர் கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த ஆச்சர்யமான பழக்கத்துக்குக் காரணம், சிவபெருமான் திருநல்லூரில் திருநாவுக்கரசரின் முடியில் தன் திருவடிகளைவைத்து ஆசீர்வாதம் செய்ததுதான்.
தலபெருமை:
மகம் நட்சத்திர கோயில்: மாசி மகத்திற்காக கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடுவதால் என்ன பலன் கிடைக்குமோ, அதே பலன் இத்தலத்தின் குளத்தில் நீராடினாலும் கிடைக்கும் என்கிறது புராணம். பாண்டவர்களின் தாய் குந்திதேவி, பஞ்சபூதங்களினால் குழந்தை பெற்றாள் என்பதால் அவளுக்கு தோஷம் ஏற்படுகிறது.
மகம் நட்சத்திரத்தில் பிறந்த குந்தி, தன் தோஷம் நீங்க நல்லூர் குளத்தில் நீராடுகிறாள். மகம் நட்சத்திரத்திற்குரிய கோயில் நல்லூர் என்றும், இக்குளத்தில் நீராடினால் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடிய பலன் கிடைக்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.
அஷ்டபுஜ மாகாளி:
எட்டு கைகளுடன் கூடிய காளி இங்கு அருள்புரிகிறாள்.
தல விருட்சம்: இக்கோயிலில் உள்ள வில்வ மரத்தை ஆதிமரம் என்கின்றனர். முதன் முதலாக தோன்றிய வில்வமரம் இது தான் என கூறப்படுகிறது. இந்த வில்வ இலைகளால் இறைவனை அர்ச்சனை செய்ய நமக்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
தல வரலாறு:
இமய மலையில் பார்வதியை சிவன் திருமணம் செய்யும் காட்சியைக்காண, உலகில் உள்ள உயிரினங்களும் திரண்டு நின்றன. இதனால் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த அகத்தியரை தென் திசைக்கு செல்லும் படி சிவபெருமான் ஆணையிட்டார். தனக்கு திருமணத்தை காணும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டதே என அகத்தியர் வருந்துகிறார். ""நான் உனக்கு திருமணக்காட்சி அருள்கிறேன்'என்றார் சிவன். அதன்படி அகத்தியருக்கு இறைவன் இத்தலத்தில் திருமணக்காட்சி காட்டியருளினார். இதைக்கண்டு மகிழ்ந்த அகத்தியர் இங்குள்ள சுந்தரலிங்கத்தின் வலதுபுறம் மற்றொரு லிங்கத்தை வைத்து பூஜித்து பேறுபெற்றார். அகத்தியர் தரிசித்த திருமணக்கோல மூர்த்தியை மூல லிங்கத்தின் பின்புறம் காணலாம்.
பிரார்த்தனை
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வழிபாடு செய்தால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.திருமண தடையால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்தால் திருமணம் விரைவில் நடைபெறும். மேலும் கருவுற்ற பெண்கள் சுகப்பிரசவத்திற்காக வளைகாப்பு நடத்தியும், நினைத்த காரியம் நிறைவேறவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
பாபநாசம்-வலங்கைமான் சாலையில் பாபநாசத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் வாழைபழக்கடை என்ற கிராமம் அருகே நல்லூர் அமைந்துள்ளது.
தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் உள்ள பாபநாசத்தில் இறங்கி அங்கிருந்து குடவாசல் செல்லும் நகர பேருந்தில் பயணம் செய்து இத்தலம் அடையலாம். பாபநாசத்தில் இருந்து ஆட்டோ வசதி உள்ளது.
முகவரி:
அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோயில், திருநல்லூர்-614208. வலங்கைமான் வட்டம், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.
போன்:
+91 93631 41676
+91 7994347966
if you want to support us via UPI id
k.navaneethan83@ybl
Join this channel to get access to perks:
[ Ссылка ]
- தமிழ்
![](https://i.ytimg.com/vi/0pkz7mjJW18/maxresdefault.jpg)