90 பொது
பாடல் எண் : 1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.
பொழிப்புரை :
இறைவனாகிய எந்தையின் திருவடி நீழல் குற்றமற்ற வீணையின் நாதமும் , மாலையிலே தோன்றிய நிலவின் தண்மையும் , வீசுகின்ற தென்றலின் சாயலும் , செறிந்த இளவேனிலின் மாட்சியும் , ஒலிக்கும் வண்டுகள் மொய்க்கும் பொய்கையின் குளிர்ச்சியும் போன்று இன்பம் பயப்பதாகும் .
பாடல் எண் : 2
நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே.
பொழிப்புரை :
ஞானமும் , கல்வியும் , நானறிந்த வித்தையும் பஞ்சாட்சரமே ; நா கூறி வழிபடுவதும் அதனையே ; நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும் .
குறிப்புரை :
ஞானமும் - பரஞானம் . கல்வி - அபரஞானம் . ஞானமும் கல்வியும் - கல்வியால் விளையும் அறிவும் கல்வியும் . நானறிவிச்சை - நான் அறிந்தனவாய மந்திரம் அல்லது கலையுணர்வு . நன்னெறி - ஞானம் , வீடுபேறடையும் வழி .
Ещё видео!