நேரு பெருமானே
குழந்தைகள் தினம்
கொண்டாட வேண்டும்
கூப்பிடுங்கள்
குழந்தைகளை
அங்கங்கே தேசமெங்கும்
இரும்படிக்கும் ரோஜாக்களை...
பொதி சுமக்கும் பூக்களை...
தாய்ப்பாலுக்குச் சம்பளம் கட்டச்
சம்பாதிக்கும் சிசுக்களை...
சிலுவையில் அறையப்பட்ட
சின்னச்சின்ன ஏசுகளை...
கூப்பிடுங்கள் நேருஜி
குழந்தைகள் தினம்
கொண்டாட வேண்டும்
சிவகாசியின்
வெடிமருந்துக் கிடங்குகளில்...
எவருக்கோ தீக்குச்சிகளாய்
எரிகின்றார்கள் - குழந்தைகள்
எரிகின்றார்கள்
தீபாவளியின் வெள்ளோட்டமாய்
வெடிக்கிறார்கள் - குழந்தைகள்
வெடிக்கிறார்கள்
கந்தகக் கிடங்குகளில்
சந்தனப் பூக்கள்
கூப்பிடுங்கள்
அந்த
எழுபதாயிரம் பூக்களை
இப்போதே கூப்பிடுங்கள்
காஷ்மீரின்
கம்பளத் தொழிற்சாலைகளில்...
தரைவிரிப்பாய் மிதிபடும்
தாமரைகள் தாமரைகள்
கம்பளம் சுமக்கும்
சம்பளக் கன்றுகள்
நுரையீரல் பைநிறைய
வியாதியின் நுரைகள்
கூப்பிடுங்கள்
அந்த
ஒரு லட்சம் பிஞ்சுகளை
உடனே கூப்பிடுங்கள்
மேற்கு வங்கத்தில்
செங்கற் சூளைகளில்...
களிமண்ணில் கரையும்
எங்கள் தங்கங்கள்
செம்மண் குழைப்பதோ
செந்நீரில் வேர்வையில்
சுட்டுக் கொடுப்பதோ
சூடான பெருமூச்சில்
கூப்பிடுங்கள்
அந்த
நாற்பதாயிரம் தளிர்களை
நாளைக்கே கூப்பிடுங்கள்
சூரத்தின்
வைரத் தொழிற்சாலைகளில்...
வைரங்களை அறுக்கும்
எங்கள் வாழைத் தண்டுகள்
பிஞ்சுக் கரங்களில்
பிரபஞ்ச பாரங்கள்
வைரத்திற்கு நிறமில்லையாமே
இவர்கள்
வாழ்க்கைக்கு மட்டும்
என்ன நிறம்?
கூப்பிடுங்கள்
அந்த
முப்பதாயிரம் மொட்டுகளை
இப்போதே கூப்பிடுங்கள்
டெல்லியின் டீக்கடைகளில்...
வட்டில் கழுவி
வட்டில் கழுவி
வயிறு கழுவும் பிள்ளைகள்
குடித்த கோப்பையிலும்
தேநீர் மிஞ்சும்
அந்த
வாடகைக் குழந்தைகளின்
வாழ்வில் எது மிஞ்சும்?
கூப்பிடுங்கள்
அந்த
அறுபதாயிரம் பிஞ்சுகளை
அவசரமாய்க் கூப்பிடுங்கள்
ஃபொரோஸாபாத்தின்
வளையல் கூடங்களில்...
மலிவு விலையில்
மனிதக் குருத்துக்கள்
கண்ணாடித் துண்டுகள்
சுவாசப்பை அறுப்பதால்
சம்பளமும் மரணமும்
தவணை முறையில்...
பள்ளி செல்லவில்லை
வளையல் மட்டும்
பூஜ்யம்போடத் தவறவில்லை
கூப்பிடுங்கள்
அந்த
நாற்பதாயிரம் நாற்றுகளை
நலுங்காமல் கூப்பிடுங்கள்
அலிகாரின்
பூட்டுத் தொழிற்சாலைகளில்...
இரும்புகள் சுமந்துதிரியும்
ஈசல்கள்
பூட்டுகளில் தொலைந்துபோகும்
சின்னச்சின்னச் சாவிகள்
வயதுக்கு வருமுன்னே
காசநோயில் கருகிக் கருகி
ரத்தம் துப்பும் குத்தகைமலர்கள்
கூப்பிடுங்கள்
அந்தப்
பத்தாயிரம் மலர்களை
மொத்தமாய்க் கூப்பிடுங்கள்
இன்னும்...
பணயப் பாண்டங்களாய்
உயிர்ச் சில்லறைகளாய்
காமாந்தகாரர்களின்
ஏமாந்த தூதுவர்களாய்
மன்மத வில்லுக்கு
வளையுண்ட கரும்புகளாய்
போதைமாத்திரை கடத்தும்
சதைப் பெட்டிகளாய்
பிச்சைத் தொழிலில்
பேசும் திருவோடுகளாய்
எத்தனை எத்தனை
இந்நாட்டு மன்னர்கள்...?
ஐயோ பாவம்
கூப்பிடுங்கள் அவர்களை
குழந்தைகள் தினம்
கொண்டாடலாம்
நேருஜி
அந்தக்
கொழுந்துகள் இல்லாமல்
குழந்தைகள் தினம்
கொண்டாடினால்
சட்டையில் நானும்
கட்டாயம் அணிவேன்
ஒரு
கருப்பு ரோஜா
![](https://s2.save4k.ru/pic/yNQHBDtZWY4/mqdefault.jpg)